கோலாலம்பூர்: கொவிட்-19 கிருமித்தொற்றால் நேரும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக 'பூஸ்டர்' எனப்படும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு மலேசியா அதன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் 115 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் மருத்துவமனைக்கு இறந்த நிலையில் வந்தவர்கள் 36 என்று கூறப்பட்டது.
ஐந்து மாதங்களில் பதிவான ஆக அதிகமான உயிரிழப்புகள் இதுவே என்று அறியப்படுகிறது. இவ்வாண்டுத் தரவுகளின் அடிப்படையில், உயிரிழந்த பெரும்பாலானோர் கொவிட்-19க்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியைப் போட்டிராதவர்கள் என்று கூறப்பட்டது.
"கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களில் 90 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்," என்று மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்குமுன், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று 132 கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகின.
இதற்கிடையே, கடந்த மாதம் 5ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடையே உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட 113 நோயாளிகளில், 9 விழுக்காட்டினருக்குத் தாங்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே தெரியவில்லை என்று திரு கைரி குறிப்பிட்டார்.
தங்களின் அன்றாட வாழ்க்கையில் சாதாரண சளிக்காய்ச்சலாக கொவிட்-19ஐக் கருதவேண்டாம் என்று திரு கைரி தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

