மாஸ்கோ: உக்ரேனின் மரியபோல் நகரில் உள்ள சிறார் மருத்துவ
மனையை ரஷ்யப் படைகள் வெடிவைத்து தகர்த்ததில் குழந்தைகள் மாண்டதாக உக்ரேன் கூறுவது உண்மையல்ல என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என யாரும் இல்லை என்று ரஷ்யா கூறியது. அங்கு உக்ரேனிய ராணுவ வீரர்கள் மட்டுமே இருப்பதாக ஐநாவுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தரப் பிரதிநிதி டிமிட்ரி பொலியேன்ஸ்கி டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.
உக்ரேன் அந்த மருத்துவ
மனையை ராணுவ முகாமாக
மாற்றியதாகவும் அங்கிருந்து ரஷ்ய வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்துவதாகவும் திரு பொலியேன்ஸ்கி கூறினார்.
"தகவல் பயங்கரவாதத்தில் உக்ரேன் ஈடுபடுகிறது," என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவரங்களை ரஷ்ய ராணுவத்திடமிருந்து கேட்டிருப்பதாக ரஷ்ய அரசாங்கம் கூறியது. இந்நிலையில், உக்ரேன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரஷ்ய வங்கிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் ரஷ்ய சுற்றுப்பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தானியங்கி வங்கி இயந்திரங்
களிலிருந்து அவர்களால் பணம் எடுக்க முடியவில்லை என்றும் சொந்த செலவுக்காக பணம் இன்றி அவர்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்து, இந்தோனீசியாவின் பாலித் தீவு போன்ற இடங்களில் ரஷ்ய சுற்றுப்பயணிகள் பலருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மரியபோல் நகரிலிருந்து பொதுமக்களைப்
பத்திரமாக வெளியேற்ற மீண்டும் முயற்சி செய்யப்போவதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
அவர்களை அங்கிருந்து வெளியேற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக உக்ரேனிய துணைப் பிரதமர் இரினா வெரேஸ்சுக் கூறினார்.
மரியபோல் நகரில் தற்காலிக சண்டை நிறுத்தம் மீறப்பட்டதற்கு ரஷ்யப் படையினரும் உக்ரேனியப் படையினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

