சோஃபியா (பல்கேரியா): ரஷ்ய படையெடுப்புக் காரணமாக மில்லியன் கணக்கானோர் உக்ரேனிலிருந்து வெளியேறி வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அவர்களை ஏற்றுக்கொண்டு தங்களின் ஊழியரணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரேனிலிருந்து வெளியேறிய அனைத்து அகதிகளுக்கும் வேலை தருவது சவாலாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுமார் 2.5 மில்லியன் பேர் உக்ரேனிலிருந்து வெளியேறிவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவே ஐரோப்பா எதிர்நோக்கும் ஆகப் பெரிய அகதிகள் தொடர்பிலான நெருக்கடி என்று அது குறிப்பிட்டது.
உக்ரேனிலிருந்து வெளியேறிய பாதிக்கும் மேலான அகதிகள் தற்போது போலந்தில் உள்ளனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பல்கேரியாவிலும் மொல்டோவாவிலும் இருக்கின்றனர். இவ்விரு நாடுகளும், மக்கள்தொகை ஆக வேகமாகக் குறையும் உலக நாடுகளில் அடங்கும்.

