கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் பாரு மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
56 உறுப்பினர்களைக் கொண்ட ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் 40 இடங்களைக் கைப்பற்றியுள்ளது தேசிய முன்னணி. இது பெரும்பான்மை வெற்றிக்குத் தேவையான 38 இடங்களைவிட அதிகம்.
இத்தேர்தலில் வாக்களிக்க 1,426,573 பேர் தகுதி பெற்றிருந்தாலும் 54 விழுக்காட்டு வாக்குகளே பதிவாகின. மலேசியாவில் அண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களிலேயே ஆக மோசமான வாக்குப்பதிவு இது.
வேட்பாளர்கள் குறித்த மலேசிய வாக்காளர்களின் நம்பிக்கை தேர்தலுக்குப் பிறகு பொய்த்து போவதன் காரணமாகவே, அவர்கள் வாக்களிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு மலாக்கா, சரவாக் சட்டமன்றத் தேர்தல்களில் முறையே, 65, 60 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின.
குறைவான வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாதது இவை இரண்டுமே, தேசிய முன்னணி இத்தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற காரணம் என்று கூறப்படுகிறது.
ஒற்றுமையின்மையால் எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்துவிட்டதால், 2018ல் 18 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த தேசிய முன்னணி, இப்போது 40 இடங்களை வென்றுள்ளது.
2018ல் வெற்றி பெற்றிருந்த பக்கத்தான் ஹரப்பான், கிட்டத்தட்ட பாதி வாக்குகளை இழந்துவிட்டது. 26 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்ற அக்கூட்டணி, வெறும்
12 இடங்களையே வென்றுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட்ட 15 கட்சிகளில் குறைந்தபட்ச வாக்குகளைப் பெறத் தவறிய ஐந்து கட்சிகள் தங்களது அனைத்து வைப்பு தொகையையும் இழந்துவிட்டன.
பிகேஆர் கட்சியின் ஏழு தொகுதிகள் உட்பட பக்கத்தான் ஹரப்பான் 11 இடங்களில் வைப்புத்தொகையை இழந்தது.
"குறைவான வாக்குப்பதிவு விகிதம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், ஜனநாயக ஆட்சிமுறையை அச்சுறுத்துவதாகவும் உள்ளது," என்றார் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி, "ஜோகூர் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்காது," என்றார்.

