கியவ்: நேட்டோ உறுப்பு நாடுகள் விரைவில் ரஷ்யப் படைகளால் தாக்கப்படக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி நேட்டோவை எச்சரித்துள்ளார்.
போலந்து எல்லைக்கு அருகேயுள்ள உக்ரேனிய ராணுவத் தளத்தை ரஷ்யப் படைகள் தாக்கியதைத் தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
ராணுவத் தளம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் மாண்டுவிட்டனர். 134 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், 'நோ ஃப்ளை ஸோன்' எனப்படும் உக்ரேன் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.
"ரஷ்யப் படைகளின் ஏவுகணைகள் உக்ரேனுக்கு மேற்கே போலந்து எல்லைக்கு மிகமிக அருகில் விழுந்துள்ளது. இது நேட்டோவுக்கு ஓர் எச்சரிக்கை.
"நேட்டோ உறுப்பு நாடுகளையும் ரஷ்யா குறிவைக்கும் முன்னர் உக்ரேன் வான்பரப்பை 'நோ ஃப்ளை ஸோனாக' அறிவியுங்கள்," என்று கூறினார்.
"சென்ற ஆண்டே, நான் நேட்டோவை எச்சரித்திருந்தேன். ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடைகளைக் கொண்டு வராவிட்டால் அது போருக்கு வழிவகுக்கும் என்று முன்பே சொன்னேன். அதுபோல் நடந்துவிட்டது," என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்நிலையில், உரங்களின் விலை மிக வேகமாக உயர்ந்து வருவதால், உக்ரேனில் போர் நிறுத்தப்படாவிட்டால் உலகளாவிய உணவு நெருக்கடி உருவாகும் என்று ரஷ்ய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆண்டிரி மெல்னிசென்கோ கூறியிருக்கிறார். இவர் உரங்கள், நிலக்கரி தொழிலதிபர் ஆவார்.
புட்டின் உக்ரேன்மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து ரஷ்ய செல்வந்தர்கள் பலர் அமைதி கோரி அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உக்ரேன் தலைநகர் கியவ்வின் புறநகர் பகுதியான இர்பினில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயது அமெரிக்க செய்தியாளர் ப்ரென்ட் ரெனாவ்ட் கொல்லப்பட்டார். இச்சண்டையில் மாண்ட முதல் வெளிநாட்டுச் செய்தியாளர் இவர். மேலும் இரண்டு செய்தியாளர்கள் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டையால் உக்ரேனிலிருந்து கிட்டத்தட்ட 2.8 மில்லியன் பேர், போலந்து, ருமேனியா உள்ளிட்ட அண்டைநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் அண்டைநாடுகள் இன்முகத்துடன் வரவேற்று வருகின்றன. ஆனால், இவை எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை என்று உக்ரேன் எல்லையை ஒட்டிஉள்ள போலந்தின் ஸமோஸ்க் நகர மேயர் கூறியுள்ளார்.
ஒரு சில நாள்களில் கிட்டத்தட்ட 35,000 பேர் வரை வருவதாகச் சொன்ன அவர், "அரசாங்கத்திடம் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்தும் உதவிகள் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உக்ரேனிய மக்களைத் தொடர்ந்து அன்புடன் வரவேற்க நிதி உதவி வேண்டும்," என்று அவர் சொன்னார்.

