ஹாங்காங்கில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளுக்கான தேவை 306 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
ஜனவரி 4 முதல் மார்ச் 7ஆம் தேதிவரை ஹாங்காங்கில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளுக்கான முன்பதிவு கணிசமாக அதிகரித்துள்ளதாக பயணத் தரவு நிறுவனமான ‘ஃபார்வர்ட்கீஸ்’ கண்டறிந்துள்ளது.
ஹாங்காங்கில் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனை, முடக்கநிலை குறித்து பேச்சு எழுந்த நிலையில், ஹாங்காங்வாசிகள் பலர் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மற்ற நகர்களுக்குப் புறப்பட்டனர்.
ஹாங்காங்கில் இருந்து புறப்படுவோருக்கு சிங்கப்பூரும் ஷங்ஹாயும் பிரபல நகர்களாக இருப்பதாக புளூம்பர்க் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ள தரவில் தெரியவருகிறது.
குறிப்பாக, பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கிய காலத்தில் விமானச் சேவை முன்பதிவுகள் வேகமாக அதிகரித்தன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அப்போது அறிவித்து இருந்தார்.
“ஹாங்காங்கில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே மக்களின் தலையாய நோக்கமாக இருந்தது. பயணிகளில் 70 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் ஒருவழி விமானப் பயணச்சீட்டுகளையே முன்பதிவு செய்தனர். கொவிட்-19க்கு முந்தைய சூழலில் இந்த விகிதம் வெறும் 26 விழுக்காடாக இருந்தது,” என்று ‘ஃபார்வர்ட்கீஸ்’ நிறுவனத்தின் உதவித் தலைவர் ஒலிவியர் போன்டி கூறினார்.