வெலிங்டன்: தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த நியூசிலாந்து அடுத்த மாதம் அதன் எல்லைகளை திறக்கவுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க நியூசிலாந்து தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியுள்ளார். பயணிகளுக்கு அந்நாடு ஒரு பாதுகாப்பான அனுபவத்தைத் தரும் என தாம் நம்புவதாக ஆர்டன் குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பயணிகள் ஏப்ரல் 12லிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள தேவையின்றி அங்கு செல்லலாம்.
அடுத்த கட்டமாக நியூசிலாந்துக்குப் பயணம் செய்ய விசா தேவையில்லாத நாடுகளான சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மே முதல் தேதியிலிருந்து நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
அனைத்து பயணிகளும் பயணத்துக்கு முன்னும், நியூசிலாந்தைச் சென்றடைந்தவுடனும் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். பயணிகளின் வருகை நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

