மணிலா: வறுமையை ஒழிக்கும் போராட்டத்திற்கு இடையில், கொள்ளைநோய் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் மேலும் 4.7 மில்லியன் பேர் கொடிய வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆசிய மேம்பாட்டு வங்கி கூறிஉள்ளது.
நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டாலருக்கும் (2.60 வெள்ளி) குறைவான வருமானம் ஈட்டுபவர்கள், கடுமையான வறுமையில் உள்ளவர்கள் என வரையறுக்கப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டு 24.3 மில்லியன் பேர் அல்லது 650 மில்லியன் பேர் கொண்ட தென்கிழக்காசியாவின் மக்கள்தொகையில் 3.7 விழுக்காட்டினர் இந்த நிலையில் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை 2017, 2018, 2019ல் முறையே 21.2, 18, 14,9 மில்லியன் எனக் குறைந்து வந்தது.
கிருமிப் பரவல் காரணமாக பலர் வேலையிழந்தது, மோசமடையும் சமத்துவமின்மை போன்றவற்றின் காரணமாக வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாக வங்கியின் தலைவர் கூறினார். குறிப்பாக, பெண்கள், மூத்த வயதுடையவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

