கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக குறைந்துவந்த தொற்று எண்ணிக்கை, கடந்த வாரம் எட்டு விழுக்காடு உயர்ந்ததாக அமைப்பு தெரிவித்தது. சென்ற வாரம் 11 மில்லியன் சம்பவங்களும், தொற்றுப் பாதிப்பால் 43,000 மரணங்களும் பதிவாகின.
சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட மேற்கு பசிபிக் வட்டாரத்தில் சென்ற வாரம் புதிய தொற்றுச் சம்பவங்கள் 29 விழுக்காடு உயர்ந்தன. சென்ற டிசம்பரிலிருந்து இந்த வட்டாரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த வட்டாரத்தில் 5.02 மில்லியன் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒப்புநோக்க தொற்றிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் தற்போது 4.99 மில்லியன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பதிவுசெய்யப்படாத இன்னும் அதிகமான சம்பவங்கள் இருக்கக்கூடும் என அமைப்பு நம்புகிறது. அதனால் இந்நிலைமை மோசமடையக்கூடும் என எதிர்பார்க்கலாம் என உலக சுகாதார அமைப்பு தலைவர் எச்சரித்தார். சம்பவங்கள் அதிகரிக்க, மரணங்களும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.
தொற்றுப் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், நாடுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.