1,200 பேர் தஞ்சமடைந்திருந்த திரையரங்குமீது ரஷ்யா தாக்குதல்
மரியபோல்: உக்ரேன்-ரஷ்யா போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யப் படைகள் திட்டமிட்டே பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், உக்ரேனின் மரியபோல் நகரில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் 1,200 பேர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கை ரஷ்யப் படைகள் தகர்த்துள்ளன.
இதுபற்றி பேசிய உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா, "மரியபோலில் ரஷ்யப் படைகள் இன்னொரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளன. ரஷ்யர்களுக்கு இங்கு மக்கள் தஞ்சமடைந்தது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மரியபோலை காப்பாற்றுங்கள்," என்றார்.
அக்கட்டடத்தின் அடித்தளத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததால், தாக்குதலில் அவர்கள் உயிர்பிழைத்திருப்பதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஸெலன்ஸ்கி
இதற்கிடையே, காணொளி அழைப்பு மூலம் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ஜெர்மனி தலைமையேற்று, போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
"சுதந்திரத்திற்கும் சுதந்திரமின்மைக்கும் இடையில் இப்போது ஐரோப்பாவில் ஒரு சுவர் உள்ளது. அந்த சுவரை ஜெர்மன் அதிபர்தான் தகர்க்க வேண்டும்," என்றார் அவர். மேற்கத்திய தலைவர்கள், ரஷ்யாவைத் தடுக்க போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றார் அவர்.
போலந்தில் பாதுகாப்பு
இதற்கிடையே, போலந்தில் படைகளையும் பாதுகாப்பையும் பலப்படுத்தப் போவதாக பிரிட்டன் கூறியுள்ளது.
100 வீரர்கள் உட்பட போலந்தில் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு நிறுவப்பட உள்ளதாக தற்காப்பு அமைச்சர் பென் வால்ஸ் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து அதன் வான்வெளியைப் பாதுகாக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

