பெய்ஜிங்: ஈராண்டு காணாத மோசமான கிருமிப் பரவல் காரணமாக சீனாவின் சுகாதார கட்டமைப்பு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதால், இதுவரை கடைப்பிடித்து வந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திஉள்ளது அந்நாடு.
இதன்படி முக்கியமாக, கிருமித்தொற்று உறுதி செய்யப்படும் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை நீக்கியுள்ளது. மாறாக, அவர்கள் பொது தனிமைப்படுத்தல் மையத்திற்குச் செல்ல வேண்டும்.
தொற்றில் இருந்து மீண்டவர்கள் 14 நாள்களுக்குப் பதிலாக ஏழு நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.
சுய கிருமித்தொற்று பரிசோதனைக்கு சென்ற வாரம் சீனா அனுமதி அளித்திருந்தது.
இந்தத் தளர்வுகள் எதிர்காலத்தில் சீனா ஒருவேளை, கிருமித்தொற்றை நிரந்தர நோயாக கையாளக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஷென்ஸென் நகரில் அத்தியாவசியமற்ற வர்த்தகங்களை மீண்டும் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் உச்சம்
தென்கொரியாவில் ஒரே நாளில் ஆக அதிகமாக 621,328 பேரைக் கிருமி தொற்றியது, 429 பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர அந்நாடு திட்டமிடுகிறது.
பொதுமக்கள் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, வரும் வாரத்தில் இந்த தளர்வுகள் கொண்டு வரப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அங்கு 86.6 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

