முன்னாள் தேசிய காற்பந்து வீரர் கண்ணன், முன்னாள் காற்பந்து நடுவர் திருராஜமாணிக்கம் ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் மீட்டுக்கொண்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இவர்கள் சமர்பித்த மேல் முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பிறகு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீட்டுக்கொள்ள சங்கம் இந்த வாரம் முடிவெடுத்தது.
காற்பந்து தொடர்பான மோசடியில் ஈடுபட்டதற்காக திரு ராஜமாணிக்கத்துக்கு 1994ஆம் ஆண்டிலும், திரு கண்ணனுக்கு 1995ஆம் ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டைப் பரிசீலனை செய்வதில் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டியிருந்ததாக சங்கத்தின் தலைவர் லிம் கியா தோங் குறிப்பிட்டார். இந்த முடிவு காற்பந்து தொடர்பான மோசடியை இலேசாக எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல. காற்பந்து விளையாட்டில் மோசடிக்கு இடமில்லை என்பதில் சங்கம் உறுதியாக உள்ளது என்றார் அவர். கடந்த 26 ஆண்டுகளில் கண்ணன், ராஜமாணிக்கம் இருவரும் பல முறை மேல்முறையீடு செய்த பிறகே, இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டதாக திரு லிம் குறிப்பிட்டார்.
காற்பந்து விளையாட்டில் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இருவரும் மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் முன்வைத்துள்ளது.


