லாஸ் ஏஞ்சலஸ்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் அதிகாரி ஒருவர் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதால் உயிரிழந்த கலிபோர்னியா ஆடவரின் கடைசி நிமிடக் காணொளி வியாழன் அன்று வெளியிடப்பட்டது.
காவல் துறையினர் அழுத்திப் பிடித்ததால் அவர் மரணமடைந்தது போல காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
போதைப் பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட எட்வர்ட் பிரான்ஸ்டீனை மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை சுற்றுக்காவல் அதிகாரிகள் அவரை பாசடினாவுக்கு அருகில் உள்ள சுற்றுக்காவல் நிலைய வாகன நிறுத்துமிடத்துக்கு அழைத்துச் சென்றனர் என்று காவல்துறை, பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ரத்த மாதிரி ஏன் தேவைப் படுகிறது என்று பிரான்ஸ்டீன் கேட்டதற்கு அவரை அதிகாரிகள் குப்புறத் தள்ளிவிட்டனர். அதிகாரி ஒருவர், அவரது கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்.
"என்னால் மூச்சுவிட முடியவில்லை," என்று திரும்பத் திரும்ப பிரான்ஸ்டீன் சொல்லியும் அதிகாரி காலை எடுக்கவில்லை. சில நிமிடங்களில் 38 வயது பிரான்ஸ்டீன் மயக்கமடைந்தார். பிறகு அதே நாளில் அவர் உயிரிழந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் அறிவித்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
பிரான்ஸ்டீனின் கடைசி நிமிடங்களைக் காட்டும் காணொளியை வெளியிடுவதற்கு கலிபோர்னியா தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் ஆட்சேபணை தெரிவித்தது. ஆனால் அதனை வெளியிட நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ்டீனின் குடும்பத்தினர் சுற்றுக்காவல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். திரு பிரான்ஸ்டீனுக்கு என்ன நேர்ந்தது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிரயானா பாலோமினோ, 22, தெரிவித்தார்.
"காணொளியை வெளியிடுவது, அதை பலர் பார்ப்பது மன வேதனை அளிக்கிறது," என்று திருமதி பாலோமினோ வியாழக்கிழமை கூறினார்.
"நீதி கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

