லிவ்: உக்ரேனின் மரியபோல் நகரில் திரையரங்கம் ஒன்றின்மீது ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி இரண்டு நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க உக்ரேன் வீரர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 1,200 பேர் தஞ்சமடைந்திருந்த அந்த திரையரங்கை ரஷ்யப் படையினர் சின்னாபின்னமாக்கினார். இதையடுத்து, இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுபற்றி பேசிய உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, திரையரங்க இடிபாடுகளில் இருந்து 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் உக்ரேன் படையினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சீனாவை எச்சரித்த பைடன்
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஸின்பிங்கும் காணொளி மூலம் சந்தித்து உக்ரேன் விவகாரம் குறித்து பேசினார்கள். இச்சந்திப்பு, கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்தது.
ரஷ்யாவின் கோரிக்கைபடி, அந்நாட்டிற்கு சீனா ஆயுத, நிதியுதவி அளிக்குமோ என்ற அமெரிக்காவின் அச்சத்திற்கு இடையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பைடன் சீன அதிபரிடம் கூறினார்.
சீனா போரை விரும்பவில்லை என்று அந்நாட்டின் அதிபர் கூறினார். இருப்பினும், ரஷ்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க சீனாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்திற்கு தலையசைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
அதே சமயம், இப்பிரச்சினைக்கு அரசதந்திர ரீதியில் தீர்வு காண இரு நாடுகளும் அழைப்பு விடுத்து
உள்ளன.
இதுதவிர, தைவான் பிரச்சினையில் தவறான வழிநடத்தல்கள் அமெரிக்காவுடனான நல்லுவறை முறிக்கும் என்று ஸி ஸின்பிங்கும் பைடனை எச்சரித்துள்ளார்.
ரஷ்யர்களை வரவேற்ற
அமெரிக்கர்கள்
உக்ரேன் போரால் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ள நிலையில், அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய விண்வெளி வீரர்களை ஏற்கெனவே அங்கிருந்த அமெரிக்கர்களும் ஜெர்மானியர்களும் வரவேற்றனர்.
கசக்ஸ்தானில் உள்ள பைசோனூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட உந்துகணையில் சென்ற ரஷ்ய வீரர்கள் உக்ரேன் நாட்டு தேசிய கொடியின் நிறமான மஞ்சள், நீலநிறத்தில் ஆடை அணிந்து இருந்தனர்.
ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் விண்வெளித் திட்டங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

