பெய்ஜிங்: சீனாவில் ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக இருவர் தொற்று காரணமாக மாண்டனர்.
உலகில் ஆகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில் ஓமிக்ரான் கிருமி தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான ஜிலினில் இருவர் தொற்றுக்கு உயிரிழந்துவிட்டதாக தேசிய சுகாதார மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் இருவர் மட்டுமே தொற்றுக்குப் பலியாயினர். கடைசியாக அதே ஆண்டு ஜனவரி 25ஆம் ேததி ஒருவர் உயிரிழந்தார்.
அதன் பிறகு இப்போதுதான் முதல்முறையாக கொவிட்-19 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சீனாவில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 2,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை முந்தைய நாளில் 2,416ஆக இருந்தது.
புதிய தொற்றுச் சம்பவங்களில் 2,157 உள்ளூரில் பரவியவை. அவற்றில் 78 விழுக்காடு ஜிலினில் பதிவாகியுள்ளன. இதர தொற்றுச் சம்பவங்கள் தென்கிழக்கு மாநிலமான ஃபூஜியானிலும் குவாங்டோங்கிலும் இதர பகுதிகளிலும் ஏற்பட்டு உள்ளன.
அறிகுறியற்ற தொற்றுச் சம்வங்களை சீனா தொற்றுச் சம்பவமாக வகைப்படுத்துவதில்லை. இருந்தாலும் வெள்ளிக்கிழமை அன்று 1,823 அறிகுறியற்ற தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய நாளில் இது 1,904ஆக பதிவானது.
புதிய இரு மரணச் சம்பவங்களுடன் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,638க்கு அதிகரித்துள்ளது. சீனாவில் நேற்று முன்தினம் வரை 128,462 தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப் பட்டுள்ளன.

