கோலாலம்பூர்: மலேசியாவுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மின்னியல் பயண அட்டைகள் வழங்கப்படும்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் முழுமையாகத் திறக்கும்போது, இந்த முறை நடப்புக்கு வரும் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மலேசியாவுக்குச் செல்ல விரும்புவோர் கட்டாயமாக 'மைசெஜஹாத்ரா' செயலியைப் பதவிறக்கம் செய்யவேண்டும். மலேசியாவுக்குச் செல்வதற்கு முன், கொவிட்-19 பரிசோதனை முடிவுகளை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குப் பயணி அட்டை வழங்கப்படும்.
அந்த அட்டையை வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் விமானத்தில் மலேசியாவுக்குப் பயணிக்கமுடியும். பயணிகள் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நிலை குறித்த தகவலும் அதில் இருக்கும்.
இதோடு, பயணிகளுக்குக் கிருமித்தொற்று இருப்பதை உறுதி செய்ய சுவாச பரிசோதனை வசதி வழங்கப்படும். பயணிகள் சுவாச பரிசோதனை அல்லது 'ஏஆர்டி' எனப்படும் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனையை மலேசியாவை சென்றடைந்தவுடன் செய்துகொள்ளலாம். சுவாச பரிசோதனை மூலம் பயணிகள் விமான நிலையத்தில் இருக்கவேண்டிய நேரம் வெகுவாக குறையும் எனக் கூறப்பட்டது.
எல்லைகள் திறக்கும்போது, பயணிகளுக்குப் பாதுகாப்பான, தடையற்ற பயண அனுபவத்தை வழங்க இணைந்து செயல்படும் அந்நாட்டின் சுகாதார அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் பல முன்னெச்சரிக்கை நடைமுறைகளை எளிதாக்கி வருகின்றன.

