வாஷிங்டன்: மியன்மாரில் உள்ள ரோஹிங்யா சமூகத்திற்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்த நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் இனப் படுகொலை என்றும் அவை மனிதாபிமானக் குற்றங்கள் என்றும் அதிகாரபூர்வமாக வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இதை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார்.
ரோஹிங்யா விவகாரத்தில் மியன்மாரைத் தற்போது ஆளும் ராணுவ அரசாங்கம்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்காவின் முடிவு கைகொடுக்கும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டு மியன்மார் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் குறைந்தது 730,000 ரோஹிங்யா மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடான பங்ளாதேஷுக்குச் செல்ல நேரிட்டது. பலர் கொலை செய்யப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா மக்கள் தெரிவித்தனர். சென்ற ஆண்டு, மியன்மாரின் ராணுவம் முன்னைய அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தது.

