டாக்கா: பங்ளாதேஷில் சரக்குக் கப்பல் ஒன்று பலரை ஏந்திச் சென்ற படகின் மீது மோதியதில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர். விபத்துக்கு உள்ளான படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று முன்தினம் விபத்து நிகழ்ந்தபோது படகில் 30லிருந்து 50 பேர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இரண்டு சிறுவர்கள், இரண்டு பெண்கள், ஓர் ஆண் ஆகியோரின் உடல்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்ததாக மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கூறினர்.
ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்த பிறகு சுமார் 24 பேர் கரைக்கு நீந்திச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பலர் பயத்தில் அலறியதையும் தண்ணீரில் குதித்துத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததையும் பங்ளாதேஷ் ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகள் காண்பித்தன.
பங்ளாதேஷில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்வதுண்டு. பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக இல்லாததும் அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்வதும் இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஜலோகாட்டி நகருக்கு ஆருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 50 பேர் மாண்டனர், 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த விபத்து ஒன்றிலும் பலர் மாண்டனர்.
1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பங்ளாதேஷில் சுமார் 550 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 3,600க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

