ஹாங்காங்: விமானச் சேவைகளுக்கு இருந்த தடைகளை ஹாங்காங் நீக்கியுள்ளது. மேலும், பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் கேரி லாம் மாற்றங்களை நேற்று அறிவித்தார். ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு நடப்பில் இருந்த விமானச் சேவைத் தடை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அகற்றப்படவுள்ளது.
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஹாங்காங் வாசிகளுக்கு அப்பகுதிக்குத் திரும்பும்போது நிர்ணயிக்கப்பட்ட ஹோட்டலில் 14 நாள்களுக்குப் பதிலாக ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும்.
இதற்கிடையே, சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்சன் நகரில் நடப்பில் இருந்த முடக்கநிலை அகற்றப்பட்டுள்ளது.

