ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மல்மோ லத்தீன்ஸ்கோலா நகர உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பெண்கள் மாண்டுவிட்டனர். இதுதொடர்பாக 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
50 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு பெண்களும் பள்ளி ஊழியர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திய மாணவர், அவசர எண்ணிற்கு அழைத்து
2 பேரை கொன்றுவிட்டேன் என்றும் தான் எங்கிருந்து பேசுகிறேன் என்ற விவரம் பற்றியும் காவல்துறையினரிடம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகச் செய்தி கூறுகிறது. அவன் கத்தி, கோடரி ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த மாணவரைக் கைது செய்தனர்.
முன்னதாக, தாக்குதல் சம்பவத்தின்போது, அவ்விடத்தில் கிட்டத்தட்ட 50 பேர் இருந்ததாகவும் அவர்களில் இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினார்.
இந்த தாக்குதலுக்கான எந்த உள்நோக்கமும் இதுவரை தெரிய வரவில்லை என விசாரணை அதிகாரி ஆசா நில்சன் கூறினார்.
சுவீடனில் பள்ளியில் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரியில், தெற்கு ஸ்வீடனில் ஆசிரியர், மாணவரை தாக்கி காயப்படுத்திய 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 45 வயது பள்ளி ஊழியரை தாக்கிய மாணவர் ஒருவர் கைதானார்.

