விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் விமானத்திலிருந்து ஒரு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் அது குரல் பதிவு பெட்டியா அல்லது தகவல் பதிவு பெட்டியா என்பது தெரியவில்லை.
முன்னதாக விமானத்தில் இருந்தவர்களையும், விமானத்தின் கருப்புப் பெட்டிகளையும் தேடும் பணி கனத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
விமான விபத்துக்குள்ளான மலையோரப் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சீன தேசிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது. இந்த வாரம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்யும் எனக் கூறப்பட்டது.
இரண்டு நாள்களுக்கு முன், பொயிங் 737 ரக விமானம் வுசாவ் மாநிலத்தில் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. சுமார் 29,000 அடியிலிருந்து விமானம் தலைகீழாக பூமியை நோக்கி மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்தது.
விமானத்தில் இருந்த 123 பயணிகளும், ஒன்பது விமானப் பணியாளர்களும் மாண்டதாகக் கருதப்படுகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
முழுமையான விசாரணைக்குப் பிறகே, விபத்து குறித்த மேல் தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

