மெல்பர்ன்: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி (படம்) ஓய்வை அறிவித்து ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
25 வயதே ஆன ஆஷ்லே பார்டி, மூன்று முறை கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த ஆஷ்லே பார்டி, இதுவரை 15 அனைத்துலக வெற்றிகளைப் பெற்று
உள்ளார்.
2019ஆம் ஆண்டு பிரெஞ்சு பொதுவிருதையும் 2021ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பொதுவிருதையும் வென்றுள்ளார்.
சொந்த மண்ணில் பொதுவிருதை வென்ற இரண்டாவது ஆஸ்திரேலியர் இவர். டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த 2வது ஆஸ்திரேலிய வீராங்கனையும் இவர்தான்.
இவர் கடந்த 2 ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் 2016ல் மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு வந்து முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: இபிஏ

