லிவிவ்: உக்ரேன்மீது படையெடுத்து, புட்டின் மிகப்பெரும் தவற்றைச் செய்துவிட்டார் என்று நேட்டோ கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பேசிய அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பர்க் கூறியுள்ளார்.
மேலும் ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பல்கேரியா ஆகிய கிழக்கு நாடுகளில் தமது ராணுவ பலத்தை இரட்டிப்பாக்குவதாக நேட்டோ அறிவித்துள்ளது.
ரஷ்யத் தரப்பில் இருந்து ரசாயன, உயிரியல், அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு வாய்ப்பு உள்ள நிலையில், நாடுகள் அவற்றை எதிர்கொள்ள நேட்டோ உதவும் என்றும் அது கூறியது.
ரஷ்யா-உக்ரேன் விவகாரம் குறித்து, நேட்டோ, ஜி-7, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரசல்ஸ் சென்று
உள்ளார்.
இந்த மூன்று சந்திப்புகளின்போது, உக்ரேனின் உண்மையான நண்பன் யார், துரோகி யார் என்பது தெரிந்துவிடும் என்று உக்ரே னிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறிஉள்ளார்.
அத்துடன், உக்ரேனுக்கு ஆதரவாக உலக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"உங்கள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகளைவிட்டு வெளியே வந்து அமைதிக்காக குரல் கொடுங்கள். உக்ரேனுக்கு ஆதரவாகப் போராடுங்கள்," என்று காணொளி ஒன்றில் பேசிய அவர் கேட்டுக்கொண்டார்.
ஒரு மாதமாக நடந்துவரும் ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரேனிய மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் அகதிகளாக அண்டைநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புட்டினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ், அப்பதவியில் இருந்து விலகிவிட்டார். அத்துடன் அவர் ரஷ்யாவைவிட்டே வெளியேறி விட்டார். கடந்த வாரம் அர்காடி ட்வோர்கோவிச் என்ற பொருளாதார நிபுணரும் ரஷ்ய ஆலோசனை குழுவில் இருந்து விலகினார்.