பேங்காக்: வியட்நாமிய ஆடவர் ஒருவர், தனது மனைவியைச் சந்திப்பதற்காக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது தாய்லாந்து கடற்படையினரால் பிடிபட்டார்.
திரு ஹோ ஹோங் ஹங், 37, என்ற ஆடவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலாத் தீவான புக்கெட்டில் இருந்து ரப்பர் படகில் தண்ணீர், திடீர் நூடுல்சை எடுத்துக்கொண்டு பயணம் புறப்பட்டார். ஆனால், அவரிடம் இந்த வழியில்தான் செல்லவேண்டும் என்ற வழிகாட்டும் திட்டமும் இல்லை. இருப்பினும், தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு 2,000 கி.மீ. தூரம் படகிலேயே சென்று வங்காள விரிகுடா கடலை கடக்கத் திட்டமிட்டார்.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிமிலன் தீவுக்கு அருகில் அவரது மீன்பிடி படகு வந்தபோது, கடல்துறை படையினரிடம் அவர் பிடிபட்டார்.
கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து மும்பையில் பணிபுரியும் தனது மனைவியைப் பார்க்கச் செல்வதாக ஹோ அதிகாரிகளிடம் கூறினார்.
ஹோவிடம், "வரைபடம், திசைகாட்டி, ஜிபிஎஸ், மாற்று உடைகள் என எதுவும் இல்லை. குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது," என தாய் கடற்படை மையத்தைச் சேர்ந்த கேப்டன் பிச்செட் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ேமல் விசாரணைக்காக ஹோ புக்கெட்டுக்குத் திரும்புவார் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். "நாங்கள் வியட்நாம் தூதரகம், இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டோம். ஆனால் பதிலேதும் இல்லை," என்றார் பிச்செட்.

