சிங்கப்பூர்: காற்பந்து விளையாட்டில் தமது பரம எதிரியான மலேசியாவை சிங்கப்பூர் 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் மூன்று நாடுகளுக்கு இடையிலான நட்புமுறை தொடரில் இக்குழுக்கள் மோதின.
கிட்டத்தட்ட 14,890 பார்வையாளர்கள் முன்னிலையில், தேசிய விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம், ஃபாண்டி குடும்பத்திற்கு முக்கியமான நாளாக அமைந்தது.
ஆம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இக்ஷான், இர்ஃபான், இல்ஹான் ஆகிய மூவரும் முதல்முறையாக ஒரே நாளில் காற்பந்து களத்தில் இருந்தனர்.
அது மட்டுமல்லாமல், இரு அணிகளும் கோல் எண்ணிக்கையில் 1-1 என சமமாக இருந்தபோது, 76வது நிமிடத்தில் விழுந்த இக்ஷானின் கோல்தான் சிங்கப்பூரின் வெற்றி கோலாக அமைந்தது.
தமது சகோதரர் இல்ஹான் களமிறக்கப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் அந்தக் கோல் விழுந்தது.
"கோல் போடுவது என் கடமை. ஆனால், இன்றைய நாள் கூடுதல் சிறப்பானது. சகோதரர்களாக இது எங்களுக்குச் சிறப்பானதொரு தருணம்," என்றார் இக்ஷான்.
சாங் உய்-யங் அனுப்பிய பந்தை 30வது நிமிடத்தில் கோலாக்கி சிங்கப்பூரை முன்னிலைப் பெறச் செய்தவரும் இக்ஷான்தான்.
இக்கோலைச் சமன் செய்யும் மலேசியாவின் முயற்சிக்கு பிற்பாதி ஆட்டத்தில் பலன் கிடைத்தது.
சிங்கப்பூரின் தற்காலிக பயிற்றுவிப்பாளர் நஸ்ரி நசிர், "வீரர்கள் அனைவரும் தங்களது முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தினர். கொஞ்சமும் விட்டுக்கொடுக்கவில்லை," என்றார்.
சிங்கப்பூர் அணி நாளை பிலிப்பீன்சை எதிர்கொள்கிறது.

