யோக்யகார்த்தா: கொவிட்-19 சூழலில் பயணிகளுக்கான விதிமுறைகளை ஒருமுகப்படுத்தி குழப்பத்தைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி ஜி-20 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
"கொவிட்-19 சூழலில் பயணம் செய்வோருக்கான விதிமுறைகளை ஒருமுகப்படுத்துகிறோம். குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான விவரங்களை அந்தந்த நாடுகள் முடிவெடுக்க வேண்டும்.
"நாட்டின் தேவை, நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சில நாடுகளில் பிசிஆர் பரிசோதனை முறை தேவைப்படும். மற்ற சில நாடுகளில் ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனை முறை (ஏஆர்டி) பயன்படுத்துவது உகந்ததாக இருக்கும்," என்று
இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி சடிக்கின் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
மின்னிலக்கத் தடமறிதல் செயலிகளைப் பயன்படுத்த புதிய மின்னிலக்கத் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்றார் திரு புடி. சிங்கப்பூரின் டிரேஸ்டுகெதர் செயலியைப் போல இந்தோனீசியா 'பெடுலி லின்டுன்கி' செயலியைப் பயன்படுத்துகிறது.
இந்தச் செயலியை 82 நாடுகள் அங்கீகரித்திருப்பதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சு கூறியது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டதை குடிநுழைவு அதிகாரிகளிடம் நிரூபிக்க பயணிகள் தடுப்பூசி சான்றிதழ்களை நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைச்சின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் கெரட் மெல் குறிப்பிட்டார்.
ஆனால் இந்தச் சான்றிதழ்
களைச் சில நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை என்றார் அவர். பயணிகள் எதிர்கொள்ளும் இப்
பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர். ஜி-20யின் தலைமையை இந்தோனீசியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றது.
இவ்வாரம் யோக்யகார்த்தா நகரில் முதல் சுகாதாரப் பணிக் குழுக்களின் கலந்துரையாடல்களை இந்தோனீசியா ஏற்று நடத்துகிறது. இவ்வாறு மூன்று கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல் நடைபெறும் இடத்துக்குச் சில அதிகாரிகள் நேரடியாகச் சென்றுள்ளனர். சிலர் இணையம் வழி கலந்துகொள்
கின்றனர்.
இரண்டாவது கலந்துரையாடல் இவ்வாண்டின் நடுப்பகுதியில் பாலியில் நடைபெறும். மூன்றாவது கலந்துரையாடல் இவ்வாண்டின் பிற்பாதியில் லொம்போக் தீவில் நடைபெறும்.

