கியவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பெரும் பணக்காரரும் இபிஎல் குழுவான செல்சியின் முன்னாள் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிச், உக்ரேனைச் சேர்ந்த மேலும் இருவருக்கு விஷம்
கொடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வால் ஸ்திரீட் ஜர்னல் நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை ஏற்படுத்த இந்த 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்களின் முயற்சியை விரும்பாத சிலர் இவர்களை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என்ற யூகங்கள் வலம் வருகின்றன.
இம்மாத தொடக்கத்தில் கியவ்வில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்களிடம் இதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக நாளிதழ் தெரிவித்தது.
அவர்களது கண்கள் சிவந்து, முகத்திலும் கைககளிலும் பயங்கர அரிப்பு ஏற்பட்டு தோல் உரிய ஆரம்பித்ததாகவும் கண்களிலும் கடுமையான வலி ஏற்பட்டு நீர் கொட்ட ஆரம்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மூவருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யாவோ இத்தகவலில் நிச்சயமாக உண்மை இல்லை என்று கூறியுள்ளது. இதனை, தகவல் சதி, தகவல் போர் என்கிறார் ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ்.
அத்துடன், இஸ்தான்புலில் நடந்த உக்ரேன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையிலும் அப்ரமோவிச் கலந்துகொண்டார்.
இருப்பினும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம் என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அறிவுறுத்திஉள்ளார்.
இந்நிலையில், உக்ரேனின் தெற்கு நகரமான மிக்கோலவ்வில், ரஷ்யப் படைகள் அரசாங்கக் கட்டடத்தை தாக்கி அழித்துவிட்டதாக அதன் ஆளுநர் விட்டலி கிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். எட்டு பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர். மூன்று வீரர்களைக் காணவில்லை.

