ஷாங்காய்: சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காயில் தொற்றுச் சம்பவங்கள் நித்தமும் உச்சம் தொடுகின்றன. எனவே, ஒட்டுமொத்த தொற்றுப் பரிசோதனைமேற்கொள்ளும் வகையில், ஷாங்காயின் புடோங் வட்டாரம், கிழக்குப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் முடக்கநிலை நடைமுறைக்கு வந்தது. இது வரும் வெள்ளிக்கிழமை வரை நடப்பில் இருக்கும். இந்நிலையில், நேற்று அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
மக்கள் தங்கள் குடியிருப்பு, அலுவலகக் கட்டடங்களில் உள்ள பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு, இவ்விடங்களுக்குச் செல்ல தடை கிடையாது. தொற்று பரிசோதனையைத் தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, நகரின் மேற்குப் பகுதியில் 5 நாள் பொதுமுடக்கம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். இதன்படி, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிப் பட்டியலில் சோ்க்கப்படாத அலுவலகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், பொதுப் போக்குவரத்து செயல்படாது.
இதற்கிடையே, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக மக்கள் பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரு சில கடைகளில் பொருள்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டிருந்தனர்.
ஷாங்காயில் நேற்று ஆக அதிகமாக 4,381 அறிகுறிகளற்ற தொற்றுச் சம்பவங்களும் அறிகுறியுள்ள 96 தொற்றுச் சம்பவங்களும் பதிவானதாக அந்நகர அரசாங்கம் தெரிவித்தது.

