கியவ்: உக்ரேனுடனான பேச்சுவார்த்தையின்போது உறுதி அளித்ததுபோல், ரஷ்யா படைகளைக் குறைக்கவில்லை என்று உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சண்டைக்கு இடையில், பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றுமுன்தினம், துருக்கியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, உக்ரேன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.
ஆனால், ரஷ்யா படை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அவர்களது வாக்குறுதியை நம்புவோம் என்று நினைக்கிறீர்களா. நிச்சயமாக இல்லை. நேற்றுமுன்தினம் இரவுகூட ரஷ்யா இங்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியது," என்றார் அவர்.
மரியபோல் நகரத்திலும் ரஷ்யப் படைகள் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படைக் குறைப்பு என்ற பெயரில், வடக்கு உக்ரேனில் இருந்து கிழக்கு பகுதிகளுக்கு ரஷ்யா படைகளை மாற்றுவதற்கான ரஷ்யாவின் ஏமாற்றுச் செயல் என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறினார்.
இருப்பினும், கியவ்வில் நிச்சயமாக ரஷ்யப் படைகள் கொஞ்சமாவது இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
உக்ரேனில் இருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐநா அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராண்டி சொன்னார்.
இதற்கிடையே, படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களை, ரஷ்ய அதிகாரிகள் துண்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

