பெட்டாலிங் ஜெயா: சென்ற ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தாம் மீண்டும் உயிர்பிழைத்து வருவேன் என நினைக்கவில்லை என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை, இதுவொரு அதிசயம். நான் உயிர்வாழ்வேன் என்று எண்ணவில்லை. என் வயது, மாரடைப்பு போன்றவற்றின் காரணமாக நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.
ஆனால், மருத்துவர்கள் என்னை மீண்டும் குணமடையச் செய்துள்ளனர். நான் நலமாக இருக்கிறேன். முன்பைப்போல் இல்லாவிட்டாலும், சிறு வேலைகளை என்னால் செய்யமுடியும்," மருத்துவர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.
மருத்துவத் துறையில் மலேசியா அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் மலேசியாவில் இருப்பதால் நாம் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை என்பதும் பெருமைப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் சொன்னார்.

