இலங்கையில் மின்சாரம் சேமிக்க தெரு விளக்குகள் அணைக்கப்படுதம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டை இறுக்கிவரும் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 13 மணிநேரம் வரை தடை நீடிக்கிறது.
பேருந்துகள், வணிக வாகனங்கள் பயன்படுத்தும் டீசல் முற்றாக விற்பனையில் இல்லை. பெட்ரோல் குறைவான அளவிலே விற்கப்படுவதால், பலரும் தங்கள் வாகனங்களைச் சாலையிலே விட்டுவிட்டனர்.
இந்நிலையில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதற்குக்கூட முடியாமல் இலங்கை மீனவர்கள் தவிக்கின்றனர். கடலில் ஏராளமான மீன்கள் குவிந்திருந்தாலும், அவற்றை கடலுக்குச் சென்றுபிடிக்க வழியில்லை. படகுகைளைச் செலுத்த டீசல், மண்ணெண்ணெய் இரண்டுமே கிடையாது. இதனால் மீனவக் குடும்பங்கள் பசியால் வாடுகின்றனர்.
இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டதால் இறக்குமதிக்குப் பணம் செலுத்த அந்த நாடு திண்டாடி வருகிறது. அதனால், உதவி கேட்டு பல நாடுகளையும் இலங்கை அணுகி வருகிறது.
1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின் இலங்கை சந்திக்கும் ஆக மோசமான பொருளாதார நெருக்கடி இது எனக் கூறப்படுகிறது.