உலகக் கிண்ணம் 2022 இவ்வாண்டு நவம்பர் 21ஆம் தேதி தொடங்கும். போட்டியை ஏற்றுநடத்துகிறது கத்தார். போட்டி சிறப்பாக நடைபெற அந்நாட்டு அரசாங்கம் பல பில்லியன் டாலர் செலவிட்டுவருகிறது. ஆனால் அதற்காக பல வெளிநாட்டு ஊழியர்கள் கொடுக்கும் விலையோ தங்கள் உயிர்.
போட்டிக்காக ஏழு விளையாட்டு அரங்கங்கள், புதிய விமான நிலையம், ரயில் நிலையங்கள், சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 30,000 மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அயராத உழைக்கின்றனர். அவர்களை கத்தார் அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மோசமான தங்குமிட வசதிகள், குறைந்த சம்பளம், சம்பளம் தருவதில் இழுப்பறி, பறிமுதல் செய்யப்படும் கடவுச்சீட்டுகள், வலுக்கட்டாயமாக ஆள்களை வேலைக்கு எடுப்பது போன்ற பற்பல செயல்கள் ஊழியர்களுக்கு எதிராக இழைக்கப்படுவதாகக் மனித உரிமை குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சென்ற ஆண்டு நிலவரப்படி 6,500 வெளிநாட்டு ஊழியர்கள் கத்தாரில் உயிரிழந்ததாக 'தி கார்டியன்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மாண்டவர்கள் இந்தியா, பாகிஸ்தான், நேப்பாளம், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலகக் கிண்ணம் போட்டியைக் கத்தார் ஏற்றுநடத்த தேர்வுசெய்யப்பட்டதிலிருந்து மரணங்கள் அதிகரித்ததாகச் நாளிதழ் கூறியது. இந்தத் தகவலை கத்தார் மறுத்துவருகிறது.
2014ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக் கிண்ண கட்டுமானப் பணிகளில் பணியாற்றிய வெறும் 37 பேர் மாண்டதாக கத்தார் அரசாங்கம் கூறுகிறது. அவற்றில் 34 சம்பவங்கள் வேலையிடத்துடன் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
கடும் வெயிலில் பல மணிநேரம் நின்று கட்டுமான வேலைபார்க்கும் போது, மாரடைப்பு, வெப்ப அதிர்ச்சி காரணங்களால் ஒருவர் மடியக்கூடும் என அனைத்துலக மனிதவள அமைப்பு விளக்கியது. இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கத்தார் முயன்றுவருகிறது.


