கோலாலம்பூர்: மானிய விலை RON95 பெட்ரோலை வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு விற்கப்படுவது குறித்து மலேசிய பெட்ரோல் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மானிய விலை பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்களுக்கு விற்பது தொடர்பாக உள்ள தடை குறித்து சிங்கப்பூர் எல்லையையொட்டி உள்ள எரிபொருள் நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு பலமுறை கூறப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சான்டர் நந்தா லிங்கி சொன்னார்.
இந்தத் தடை சென்ற 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடப்பில் உள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் எல்லையில் உள்ள மாநில அமைச்சுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இச்சட்டத்தை மீறும் தனிநபருக்கு 1 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 2 மில்லியன் ரிங்கிட் (640,000 வெள்ளி) அபராதம் விதிக்கப்படக்கூடும்.
சிங்கப்பூர்-மலேசியா இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நில வழிப் போக்குவரத்து இம்மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், வெளிநாட்டு வாகனம் ஒன்றிற்கு மானிய விலை (மஞ்சள் நிற குழாய்) பெட்ரோல் நிரப்பப்படும் படம் ஒன்றை மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.
சமூக ஊடகத்தில் வலம் வந்த படத்தைத் தொடர்ந்து, இந்த விஷயம் விமர்சனத்துக்குள்ளானதாக பெர்னாமா செய்தி கூறியது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பெட்ரோல் நிலைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் அலெக்சான்டர் கூறினார்.

