ஷாங்காய்: சீனாவில் கொவிட்-19 கிருமியின் மேலும் இரண்டு புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், சீனாவின் மோசமடைந்துள்ள தற்போதைய கிருமிப் பரவலுக்கும் இந்த திரிபுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதுபோல், பிரிட்டனில் உருவாகியுள்ள மற்றொரு புதிய திரிபு, ஓமிக்ரானின் பிஏ.1, பிஏ.2 திரிபுகளின் கலவை என்றும் ஓமிக்ரான் XE எனும் அந்த திரிபு மற்ற திரிபுகளைவிட வேகமாகப் பரவக்
கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
பிஏ.2 திரிபைவிட, இது 10% கூடுதல் வேகமாகப் பரவக்கூடியது என்று கூறப்படுகிறது.
முற்றிலும் முடங்கிய ஷாங்காய்
ஷாங்காய் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான கிருமித்தொற்று பரிசோதனைகளைத் தொடர்ந்து, அங்கு 13,000த்திற்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஷாங்காய் நகரத்தின் பெரும்பாலான மக்கள் ஏதோவொரு வகையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையில், மேற்குப் பகுதியில் முடக்கநிலை காலவரையறை இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பகுதி பகுதியாக இருந்து வந்த முடக்கநிலை, தற்போது ஷாங்காய் நகரம் முழுவதிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்துவதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒன்றாக வைத்து சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 1,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஷாங்காய் சிறார் மருத்துவ மையம் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முடக்கநிலை உத்தரவால் உணவு கிடைக்காமல், மருத்துவ உதவி பெற முடியாமல் தவிக்கும் மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.