கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ்வின் வீதிகளில் அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் தைரியமாக உலா வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கியவ் நகரை ரஷ்யப் படைகள் தாக்கின. ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை பிரதமர் ஜான்சன் செய்துள்ளார்.
கியவ் நகருக்கு அவர் மேற்கொண்ட திடீர் பயணம் அனை
வரையும் வியக்க வைத்துள்ளது.
ஆள் அரவமற்ற வீதிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ தம்முடன் பிரதமர் ஜான்சன் நடந்துசென்றதைக் காட்டும் காணொளி களையும் படங்களையும் அதிபர் ஸெலன்ஸ்கி வெளியிட்டார்.
இரு தலைவர்கள் வீதியில் நடந்து சென்றபோது அங்கிருந்த உக்ரேனியர்கள் அவர்களைப் பார்த்து கை அசைத்து வரவேற்றனர்.
அவர்களில் ஒருவர் திரு ஜான்
சனைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
"எங்களுக்கு உங்களது உதவி தேவை," என்றார் அவர்.
அதற்குப் பதிலளித்த திரு ஜான்சன், " உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உக்ரேனியர்களுக்கு உதவி செய்ய எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பாக்கிய
மாகக் கருதுகிறோம். உங்களுக்கு மிகச் சிறந்த அதிபர் கிடைத்
திருக்கிறார்," என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரேனியர்களுடன் பிரிட்டிஷ் மக்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையை அந்தக் கலந்துரையாடல் பிரதிபலிப்பதாக திரு ஜான்சன் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு பிரிட்டன் ஆதரவுக்
கரம் நீட்டும் என்று அவர் உறுதி அளித்தார்.
உக்ரேனுக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பிவைக்கப்போவதாக திரு ஜான்சன் தெரிவித்தார்.
போர் நடந்துகொண்டிருக்கும்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த திரு ஜான்சனின் தலைமைத்துவம் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும் என்றும் வரலாற்றில் அவர் இடம்பிடித்துவிட்டார் என்றும் அதிபர் ஸெலன்ஸ்கி பாராட்டினார்.
அதிபர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேச திரு ஜான்சன்
போலந்திலிருந்து கியவ் நகருக்கு ரயிலில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

