ஷாங்காய்: ஷாங்காயில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே நாளில் 25,000த்திற்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும் இரண்டு வாரங்களாக நீடிக்கும் முடக்கநிலையைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக குடியிருப்புப் பகுதிகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, இரண்டு வாரங்களாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகாத குடியிருப்புகளில் உள்ளவர்கள் தங்களது அக்கம்பக்கத்தில் குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அறிவிப்பு, முடக்கநிலையால் உணவு, மருந்து கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
ஷாங்காய் நகரத்தின் 2,460 பகுதிகளில் ஒரு வாரமாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகாதவை. இவை 'கட்டுக்குள்' உள்ள பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களாக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகாத 7,565 பகுதிகள் 'தொற்று தடுக்கப்பட்ட பகுதிகள்' என அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்படுகிறது.
முடக்கநிலையால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வதாக அந்நகர அதிகாரி கு ஹோங்குய் சொன்னார்.
ஆனால், தொற்றுச் சம்பவம் அதிகமாக இருக்கும் சமயத்தில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வு ஆபத்தானது என்று சிலர் விமர்சித்தனர்.

