கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அண்மையில், ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குப் பயணம் சென்றிருந்தார்.
அப்போது, அவரை வரவேற்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய தூதரக அதிகாரிகள் இருவர் மலேசியாவிற்குத் திரும்ப அழைக்கப்பட்டதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
துபாய் குடிநுழைவு துறையினர் கடப்பிதழை சரிபார்க்கும் வரை, விமான நிலையம் வந்திறங்கும் பகுதியில் பிரதமர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது எனவும் மேலும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சின் அறிக்கை கூறியது.
"இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறைகளுடன் கலந்து பேசப்பட்டது. மேலும் இருதரப்பு உறவைக் கட்டிக்காக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது," என அறிக்கை கூறியது.
சென்ற மார்ச் 27 முதல் 31ஆம் தேதிவரை துபாய் பயணம் மேற்கொண்டிருந்த இஸ்மாயில், துபாய் 2020 கண்காட்சியில் கலந்துகொண்டார்.

