ஜகார்த்தா: பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டத்தை இந்தோனீசிய நாடாளுமன்றம் நேற்று நிறை
வேற்றியது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு நேற்று எடுக்கப்பட்டது.
இந்தோனீசியாவில் இவ்வளவு காலமாகப் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தனிப்பட்ட விவகாரங்களாகக் கருதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க புதிய சட்டக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாலியல் வன்முறைக்கு எதிரான மசோதாவை சட்டமாக்க இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர்.
மசோதா சட்டாமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த சில பழமைவாத எதிர்க்கட்சியினர் முயன்று தோற்றனர்.
இத்தகையோரின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா கடந்த ஆறு ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், புதிய சட்டத்தை சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் இந்தச் சட்டத்துக்கு இருக்கும் வரம்புக்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.
அத்தகைய குற்றங்களுக்காக வேறொரு சட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தோனீசியாவில் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்துள்ளன.
பாலியல் வன்முறைக்கு எதிரான முறையான சட்டக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் குற்றம் புரிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குழப்பங்கள் நிலவின.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களைச் சாட்சிக் கூண்டில் நிறுத்தி வழக்கறிஞர்கள் கேள்வி கேட்பதாகக் கூறி அவமானப்படுத்தும் நடைமுறை இருந்ததால் பலர் முன்வரத் தயங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
புதிய சட்டத்தின்கீழ் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கரம்பிடித்த பெண், வேறு பெண்கள் ஆகியோரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவோருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
பெண்ணைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வோருக்கு ஒன்பது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
வயது குறைந்த சிறுமிகளைத் திருமணம் செய்கொள்வதும் இதில் அடங்கும்.
பெண்களின் சம்மதம் இல்லாது அவர்களது பாலியல் ரீதியான
தகவல்களை வெளியிடுவோருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

