ரஷ்யாவின் போர்க்கப்பலை அழித்துவிட்டதாக கூறுகிறது உக்ரேன்
ஒடீசா: கருங்கடல் பகுதியில் இருந்த தமது கடற்படையின் முக்கிய போர்க்கப்பல் ஒன்று மோசமாக சேதமடைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மொஸ்காவா எனும் அந்த ஏவுகணைத் தாங்கி கப்பலில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அது வெடித்துவிட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு கூறுகிறது.
ஆனால், தீப்பற்றியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்கிறது ரஷ்யா.
கப்பலில் இருந்த 510 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் மீதான கடற்படை தாக்குதலில், அக்கப்பல் பெரும்பங்கு வகித்தது. அதில் குறைந்தது 700 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து தாக்கக்கூடிய 16 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்ததாக ரஷ்யா கூறுகிறது.
ஏவுகணைகள், எறிபடைகள், ஆளில்லா வானூர்திகளின் தாக்குதல்களைச் சமாளிக்க ரஷ்யாவுக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது.
ஆனால் உக்ரேனோ, தனது 'நெப்டியூன்' ஏவுகணைகள்தான் ரஷ்யாவின் மொஸ்காவா கப்பலைத் தாக்கி அழித்ததாக கூறுகிறது.
முன்னதாக, ஸ்நேக் தீவில் உள்ள உக்ரேனியப் படைகள், ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு மொஸ்காவா போர்க்கப்பலில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒருபோதும் அது நடக்காது என்ற உக்ரேன்படையினரோ, வந்த வழியே திரும்பிச் செல் என ரஷ்யப் படைக்குப் பதிலடி கொடுத்தனர்.
ஸ்நேக் தீவுகளில் உள்ள உக்ரேன் படையினரின் தாக்குதலில் மொஸ்காவா கப்பல் அழிக்கப்பட்டதாக உக்ரேனின் ஒடீசா மாநில ஆளுநர் சொன்னார்.
அமெரிக்காத் தலைமையிலான ராணுவக் கூட்டணியில், ஃபின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைந்தால், தனது தற்காப்பை வலுப்படுத்த, ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கமானவரும் ரஷ்ய பாதுகாப்பு மன்றத்தின் துணைத் தலைவருமான டிமெட்ரி மெட்வேவ் நேட்டோவை எச்சரித்து உள்ளார்.
ஃபின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் இணைவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
இந்நாடுகள் நேட்டோவில் இணைந்தால், பால்டிக் கடலில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையைப் பலப்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, ஜப்பான் கடலில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

