ஷாங்காய்: குடியிருப்புக் கட்டடங்கள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டதால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு கிருமி தொற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
சீன சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பான காணொளி ஒன்றில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரைக் காவல்துறையினர் அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட 10,000 பேரால் பார்க்கப்பட்ட அந்த காணொளி, அத்தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.
"நம் கட்டடத்திற்கு 10 மீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னோர் கட்டடத்தில் அனைவரும் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களாக இருப்பது நமக்கு அச்சம் தருவதாக இருக்கும்," என்றார் பெயர் வெளியிட விரும்பாத அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர்.
காலியாக உள்ள தனது ஐந்து கட்டடங்களைத் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றியுள்ளதாகவும் மேலும் ஒன்பது கட்டடங்களை அதுபோல் மாற்றவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட கட்டடத்தின் உரிமையாளரான ஜாங்ஜியாங் குழுமம் சொன்னது.
அக்கட்டடங்களில் இருந்த 39 வாடகைதாரர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து வேறு பகுதிகளுக்கு அனுப்பியதாகவும் அது சொன்னது.
இதுகுறித்து, ஷாங்காய் அரசாங்கம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

