இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான்மீது நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தலிபான் அரசாங்கத்தை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு உள்ளது.
இரு நாடுகளும் ஏறத்தாழ 2,700 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிரும் நிலையில், தலிபான் இயக்கம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தைக் கைப்பற்றியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் குனார் மாநிலத்தின் ஹெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐந்து பிள்ளைகள், ஒரு பெண் என ஆறு பேர் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் ராணுவம் எதுவும் கூறவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அரசு, மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.
இதுபோன்ற தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையே பகைமையை உருவாக்கும் எனவும் அதன் காரணமாக போர் தொடங்கினால் அது எந்தத் தரப்புக்கும் நன்மை பயக்காது என்பதை பாகிஸ்தான் தரப்பு அறிந்துகொள்ள வேண்டும் எனவும் ஆப்கானிஸ்தான் எச்சரித்து உள்ளது.
சென்ற வியாழன் அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளின் தாக்குதலில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறியது.

