ஸ்டோக்ஹம்: முஸ்லிம்களின் புனித திருக்குர்ஆனை எரிக்க சுவீடனைச் சேர்ந்த வலதுசாரிகள் திட்டமிட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து அந்நாட்டில் மிகக் கடுமையான எதிர்ப்பலை உருவாகி
உள்ளது.
கடந்த வாரயிறுதியில் வலதுசாரிகளை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்
களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த நான்கு நாள்களில் இரண்டாவது முறையாக இரு நகரங்களில் வன்முறை வெடித்தது. வலதுசாரி அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடான் தலைமையில் நடைபெற்ற குடியேறிகள் எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை கூறியது.
அதில் மூவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கறிஞரும் சொந்த யூடியூப் ஒளிவழி வைத்திருப்பவருமான திரு பலுடான், வரும் செப்டம்பர் மாதம் சுவீடனில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்யத் தேவையான ஆதரவுக் கையெழுத்துகளை அவர் இன்னும் பெறவில்லை.
எனவே அவற்றைப் பெறுவதற்காக அவர் சுவீடன் முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இஸ்லாமியர்கள் பலர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்லும் 40 வயது திரு பலுடான், அங்கு அவர்கள் முன் திருக்குர்ஆன் பதிப்புகளை எரிக்கத் திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் நோன்பு கடைப்
பிடிக்கும் ரமலான் மாதத்தில் அவர் இவ்வாறு செய்வது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமையன்று மால்மோ நகரில் திருக்குர்ஆன் பதிப்பு ஒன்றுக்கு அவர் தீயிட்டார்.
திரு பலுடானின் இச்செயல்
களினால் கடந்த சில நாள்களாக சுவீடனெங்கும் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மிகக் கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த வியாழக்கிழமை,
வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் நிகழ்ந்த மோதலில் ஏறத்தாழ 12 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர். இதற்கிடையே, சுவீடனின் தூதரை அழைத்து தனது
அதிருப்தியை ஈராக்கிய அரசாங்கம் பதிவு செய்துள்ளது.
திருக்குர்ஆன் எரிக்கப்பட்டால் அதற்கான பின்விளைவுகளை சுவீடன் எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அது எச்சரித்தது.
முஸ்லிம் நாடுகளுக்கும் சுவீடனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

