கொழும்பு: இலங்கையில் அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் குறைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.
இலங்கையில் விலைவாசி உயர்வு காரணமாக அதிபர் கோத்தபாய ராஜபட்ச பதவி விலகக் கோரி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய மகிந்த, "நாட்டை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளில் ஒன்றாக அதிகாரக் குறைப்பு இருக்கும்.
"பொருளாதாரத்தை மீட்பதற்காக அனைத்துலக பண நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்த இது உதவும்.
"பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நாட்டின் சமூக, அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது.
"நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு நிலையே சீர்திருத்தத்தின் தொடக்கமாகும்," என்றார் அவர்.
இலங்கையின் பொருளாதார சீர்குலைவிற்கு அதிபர்தான் காரணம் என தொடர்ந்து 11வது நாளாக நேற்றும் அதிபர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கள்கிழமை புதிதாகப் பதவி யேற்றுக்கொண்ட 17 அமைச்சர்களிடம் பேசிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொருளாதார நெருக்கடிக்குத் தாமும் ஒரு காரணம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர் அலி சாப்ரி, வாஷிங்டனில் அனைத்துலகப் பண நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இலங்கைக்கு விரைவாக நிதியுதவி வழங்குவது குறித்து, பரிசீலனை செய்வதாக பண நிதியம் சொன்னதாக அவர் கூறினார்.
இந்தியாவுக்குப் பாராட்டு
வாஷிங்டனில் நிதியத்தின் மாநாட்டில் இந்தியாவின் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, சரியான நேரத்தில் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்குப் பாராட்டு தெரிவித்தார்.
இலங்கையில் டீசல் கையிருப்பு தீர்ந்துவிட்ட இக்கட்டான சூழ்நிலை யில், அந்நாட்டிற்கு இந்தியா 40,000 டன் டீசல் அனுப்பியும் கடனுதவி செய்தும் உதவியது.

