டோன்பாஸ்: உக்ரேனின் கியவ் நகரில் இருந்து படைகளைத் திரும்ப பெற்ற ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதிலும், ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக கூறப்படும் மரியபோல் நகரின் தெற்கில் இருந்து நீளக்கூடிய லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய முக்கிய கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா குறிவைத்துள்ளது.
இப்பகுதிகளில் உக்ரேனின் பாதுகாப்பை உடைக்க ரஷ்யா முயன்றது. ஆனால், உக்ரேனிய வீரர்கள் விடாமல் போரிடுவதாகஉக்ரேனின் பாதுகாப்பு மன்ற செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் சொன்னார்.
ஒரே இரவில் கிட்டத்தட்ட 1,000 இலக்குகளைத் தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது.
இதன் காரணமாக டொனெட்ஸ்க் பகுதியில் நான்கு பேர் மாண்டுவிட்டனர். லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
டோன்பாஸ் பகுதியில் போர் தொடங்கிவிட்டதாகவும் அப்பகுதியில் பெருமளவில் ரஷ்ய ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
"இரண்டாவது கட்ட போர் தொடங்கிவிட்டது. எத்தனை ரஷ்யப் படைகள் வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் அவர்களை எதிர்த்துப் போரிடுவோம்," என்றார் அவர்.
உக்ரேனால் ரஷ்யாவை வீழ்த்த முடியும் என்ற உக்ரேன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவர் இகோர் ஜோவ்கவா, அதற்கு பீரங்கி அமைப்புகள், டாங்கிகள், கவச வாகனங்கள் போன்ற கனரக ஆயுதங்கள் உக்ரேனிடம் இருப்பது மிகவும் முக்கியம் என்று சொன்னார்.

