சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் கிருமித்தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தனிமை உத்தரவு விலக்கப்பட்டுள்ளது. சமூக அளவில் இடம்பெறும் கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழும் ஆஸ்திரேலியாவின் போக்கிற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் நாளை இரவு 11.59 முதல் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் நெருங்கிய தொடர்புகள் உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியவேண்டும். மேலும், தனது நெருங்கிய தொடர்பு கிருமித்தொற்றுக்கு ஆளானது உறுதியானவுடன் அவர்ஏழு நாள்களில் குறைந்தது ஐந்து 'ஏஆர்டி' பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன், விக்டோரியாவில் சில்லறை வர்த்தகக் கடைகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்ல இனி தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்ல 'கியூஆர்' குறியீட்டைக் கொண்டு பதிவுசெய்யவும் தேவையில்லை.
அம்மாநிலத்தில் முகக்கவசங்கள் தொடர்பிலான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்சில் நாளை மாலை ஆறு மணி முதல் கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் நெருங்கிய தொடர்புகள் வெளியே செல்வதற்கு முன்பு 'ஏஆர்டி' பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். உள்ளரங்குகளில் அவர்கள் முகக்கவசம் அணியவேண்டும்.
முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கிருமி பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
இந்த இரு மாநிலங்களுக்கும் செல்லும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைத்துலக பயணிகள் இனி தங்களை ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. நியூ சவுத் வேல்சில் இந்த விதிமுறை தளர்வு இம்மாதம் 30ஆம் தேதி நடப்புக்கு வரும்.