லண்டன்: முடக்கநிலை நடப்பில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதற்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களின் பிரதமர் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு மக்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று அவர் கூறினார்.
அச்சம்பவம் 2020ஆம் ஆண்டு நடைபெற்றது. பலமுறை மன்னிப்பு கேட்டுள்ள திரு ஜான்சனுக்குப் பெரும்பாலான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளனர். தமது செயல் விதிமுறையை மீறும் வண்ணம் அமைந்ததை அவர் அந்த வேளையில் அறியவில்லை என்பது அவர்களின் வாதம்.
எனினும், பிரிட்டனின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர், திரு ஜான்சனின் மன்னிப்பை வேடிக்கையான ஒன்று என்று கூறிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரு ஜான்சன் நாடாளுமன்றத்தை ஏமாற்றினாரா என்பதை விசாரிப்பதற்கு நாடாளுமன்ற குழுவை அமைப்பது குறித்து முடிவெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அரசாங்க விதிமுறைகளின்படி தெரிந்தே நாடாளுமன்றத்தை ஏமாற்றுபவர்கள் பதவிவிலக வேண்டியிருக்கலாம்.
விசாரணை நடத்தவேண்டும் என்பது வாக்கெடுப்பில் முடிவானால் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற சலுகைகள் குழு, திரு ஜான்சனுக்கு எதிராகத் தண்டனைகளை விதிக்குமாறு பரிந்துரைக்கலாம்.
தற்காலிகமாகப் பதவிவிலகுவது, நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்படுவது போன்றவை பரிந்துரைகளில் இடம்பெறலாம்.

