மணிலா: அனைத்துலக பயண, சுற்றுலா துறைகள் அடுத்த ஆண்டுக்குள் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்துறைகள் அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட வேகமாக வளர்ச்சி காணும் என்று 'டபிள்யூடிடிசி' எனும் உலக பயண, சுற்றுப்பயண மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கும் 2032ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பயண, சுற்றுப்பயணத் துறைகள் ஆண்டுதோறும் 5.8 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உலக பயண, சுற்றுலா மன்றம் மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் இந்த விவரங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
2019ஆம் ஆண்டு அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயண, சுற்றுலாத் துறைகள் 10ல் ஒரு பங்கை வகித்தன. 13.07 டிரில்லியன் வெள்ளி மதிப்புள்ள இத்துறைகள் கொள்ளைநோய்ப் பரவலால் முடங்கிப்போயின.
இவற்றின் மதிப்பு பாதியானதுடன் 62 மில்லியன் பேர் தங்களின் வேலையை இழந்தனர்.
"பயணத்துறை கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அபாரமாக மீண்டு வரவுள்ளது. இது, சீனா மீண்டும் பொருளியலைத் திறப்பதைப் பொருத்தும் இருக்கிறது," என்று உலக பயண, சுற்றுலா மன்றத்தின் தலைவர் ஜூலியா சிம்ப்சன் கூறினார்.
இன்னமும் கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் அழிக்க எண்ணம் கொண்டுள்ள ஓரிரு நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனா அடிக்கடி முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவதால் உலக வர்த்தகம், அனைத்துலக உள்நாட்டுப் பயணத் துறைகள் ஆகியவற்றில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

