சிட்னி: சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயணத் துறை சூடுபிடித்துள்ளால் ஈஸ்டர் விடுமுறை காலத்தில் அந்நாட்டின் விமான நிலையங்களில் குழப்பம் நிலவியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயணம் மேற்கொள்ள பலர் திரளாக வந்ததால் இந்நிலை உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் பள்ளி விடுமுறை காலம் இந்த வாரம் நிறைவடைகிறது. அந்நாட்டின் ஆகப் பெரிய நகரங்களான சிட்னியிலும் மெல்பர்னிலும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிட்டது.
சென்ற வாரம் சிட்னியின் உள்நாட்டு விமான நிலையத்தில் பெட்டிகளைப் பெற்றுக்கொள்ள உருவான வரிசை விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் நடைபாதைவரை நீண்டது. மூன்று மணிநேரத்திற்கு மேல் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சில பயணிகள் தெரிவித்தனர்.
சிட்னி உள்நாட்டு விமான நிலையம் ஒருநாளைக்கு 80,000க்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த விமான நிலையம் இத்தனை பயணிகளைக் கையாள்வது இதுவே முதல்முறை.
எனினும், பயணிகளுக்கு இந்த ஆரவாரம் மோசமான அனுபவமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான 'குவான்டாஸ்' வழங்கும் சேவையில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இம்மாதம் ஏழாம் தேதியன்று 'குவான்டாஸ்', பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

