வாஷிங்டன்: தமது கடுமையான நடவடிக்கையால், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். தற்போது சக விமானப் பயணியை அடித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டைசன்.
அடிவாங்கிய நபர் டைசனின் ரசிகர் என நம்பப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் டைசனைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆனந்தம். டைசனுடன் பேசி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ஆனால், அந்த நபரின் வாய் ஓயவில்லை. கலகலப்பாக ஆரம்பித்த உரையாடல், பின்னர் டைசனுக்கு எரிச்சலூட்ட தொடங்கியது. பலமுறை டைசன் அவரை வாயை மூடச்சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை. அடையாளம் தெரியாத அந்த நபர் தண்ணீர்ப் புட்டியை டைசன் மீது தூக்கியெறிந்ததாகவும் கூறப்பட்டது.
வந்ததே டைசனுக்கு மூக்கு மேல் கோபம். நபரின் முகத்தில் ஓங்கி பலமுறை குத்தினார். டைசனின் குத்து இடிபோல் இறங்க அவரின், நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தது.
இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காயத்துடனும் அதிர்ச்சியுடனும் அமர்ந்திருக்கும் அப்பயணியின் காணொளி இணையத்தில் பரவியது.

