கிருமித்தொற்று காரணமாக மாண்டுபோன பிள்ளைகளில்
பாதிக்கும் மேற்பட்டவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள்
பேங்காக்: தாய்லாந்தில் அடுத்த மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மருத்துவமனைகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றன.
ஜனவரி மாதம், தாய்லாந்தில் கிருமித்தொற்று காரணமாக மாண்டுபோன பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஐந்து வயதுக்கும் குறைவானவர்கள் என்பதே அதற்கு காரணம். ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளுக்கான தடுப்பூசிக்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஓமிக்ரான் பரவல் காரணமாக அதிகளவில் பிள்ளைகள் தொற்றுக்கு ஆளானதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் நேற்று சொன்னார்.
இந்நிலையில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால், அதிகமான பிள்ளைகள் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்பதால் மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடவும் அது வலியுறுத்தி வருகிறது.
12 முதல் 17 வயது பிள்ளைகளுக்கு நான்கு அல்லது ஆறு மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் தடுப்பூசி போட, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தாய்லாந்தின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் 22 விழுக்காடு உயர்ந்துள்ளன. ஆனால், தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் 19 விழுக்காடு குறைந்துள்ளது.

